Saturday, August 1, 2009

சே குவேராவின் கடிதங்கள் ...


ஃபிடல்,


இந்த நேரத்தில் எனக்கு பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது; உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது; புறப்படத் தயாரானபோது நமக்கு ஏற்பட்ட பரபரப்பு.

நடக்க இருக்கும் விபரீதம் எனக்கு எப்போது புரிந்தது தெரியுமா? ஒரு நாள் அவர்கள் (புரட்சிப் படையினர்) வந்து, 'இறந்து போனால் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்?' என்று கேட்டார்கள். பிறகு, எல்லாம் புரிந்து விட்டது. ஒரு புரட்சியின் முடிவு, வெற்றி அல்லது வீரமரணம் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இன்று, நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். அன்று போல் இல்லாமல் பக்குவப்பட்டிருக்கிறோம். ஆனால், கடந்த காலம் மீண்டும் திரும்புகிறது. க்யூப மண்ணிலே நிகழ்ந்த க்யூபப் புரட்சியில், எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நான் நிறைவேற்றி விட்டேன் என்று நினைக்கிறேன்.

ஆகையால், நான், உங்களிடமிருந்தும் நமது தோழர்களிடமிருந்தும், என்னுடைய க்யூப மக்களிடமிருந்தும் விடை பெறுகிறேன்.

கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும், மேஜர் பொறுப்பில் இருந்தும், க்யூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகிறேன். இனி, எனக்கு க்யூபாவுடன் சட்ட ரீதியான எந்த உறவும் இல்லை. ஆனால், வேறு வகையில் பிணைப்புக்கள் உள்ளன. நிச்சயமாக அவற்றை என்னால் உதறித் தள்ள முடியாது.

கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த, நான் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு வந்தேன் என்றே நம்புகிறேன். நான் செய்த ஒரே தவறு என்ன தெரியுமா? சியாரா மிஸ்த்ரா மலைத் தொடரில் கழித்த முதல் சில தினங்களில் உங்கள் மேல் மேலும் அதிக நம்பிக்கை வைக்காமல் இருந்தது. ஒரு புரட்சியாளராக, ஒரு தலைவராகப் பரிணமித்த உங்களது குணாதிசயங்களை உடனடியாகப் புரிந்து கொள்ளத் தவறியது.

கரீபிய சிக்கல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்தச் சோகமான, ஆனால் துடிப்பு மிக்க கால கட்டத்தில், உங்களுடன் சேர்ந்து, நமது மக்களின் பக்கம் நின்ற தருணத்தை இன்றும் பெருமையுடன் உணர்கிறேன். அந்தச் சமயத்தில், நீங்கள் இயங்கியதைப் போல் அவ்வளவு பிரமாதமாக ஒரு தலைவர் செயல்படுவது அபூர்வமானது. உங்களைத் தயக்கம் இன்றி பின்பற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. க்யூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால், உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

ஆக, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் மறு பக்கம் துயரத்தோடும் நான் என் பயணத்தை மேற்கொள்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என் நேசத்துக்குரிய மக்கள் ஒரு சிறப்பான சமுதாயத்தை கட்டி எழுப்புவார்கள் என்ற என் நம்பிக்கையை இங்கே விட்டுவிட்டுப் பிரிகிறேன். புதிய போராட்டக் களங்கள் காத்திருக்கின்றன.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்குவேன். ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதை புனித கடமையாக மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். இதுதான் என்னுடைய பலத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

எங்கோ, கண் காணாத இடத்தில் என் முடிவு நெருங்குமானால், அந்தக் கடைசித் தருணத்தில் க்யூப மக்களையும், குறிப்பாக உங்களையும்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கும் அதற்கு நீங்களே ஒரு உதாரணமாக விளங்கியதற்கும் என் நன்றி, என்னுடைய செயல்களின் விளைவுகள் உங்கள் நம்பிக்கைக்குப் பங்கம் விளைவிக்காமல் இருக்க முயல்வேன். நமது புரட்சியின் அயல்நாட்டுக் கொள்கையோடு எப்போதும் அடையாளம் காணப்பட்டவன் நான். இப்போதும், அது தொடர்கிறது. நான் எங்கு இருந்தாலும், ஒரு க்யூபப் புரட்சியாளனின் பொறுப்புணர்வோடு விளங்குவேன்.

எனது மனைவி மக்களுக்கு எந்தச் சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. இப்படி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். அவர்கள் வாழ்வதற்குத் தேவையானவற்றை கவனித்துக் கொள்வதற்கும், குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதற்கும் ஓர் அரசு இருக்கிறது.

இன்னும் பல விஷயங்களை உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்ல விருப்பம். ஆனால் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்ல விரும்புவதை வெளிப்படுத்தும் சக்தி, வார்த்தைகளுக்கு இல்லை. காகிதங்கள் வீணாவதைத் தவிர, வேறு பயன் ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.

என் முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

- சே -

பெற்றோருக்கு எழுதிய கடிதம்.

ன் அன்பிற்குரியவர்களே,

கேடயத்துடன் என் பயணம் மீண்டும் தொடர்கிறது.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் விடை பெற்று, உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில், நான் ஒரு சிறந்த படைவீரனாகவும், சிறந்த மருத்துவராகவும் இல்லாமல் இருந்ததற்காக வருந்தி எழுதியிருந்ததை இபொழுது நினைவு கூர்கிறேன். இன்று, நான் அத்தனை மோசமான ஒரு படைவீரன் அல்ல.

எனது நம்பிக்கை மேலும் உறுதியடைந்துள்ளது. என்னுடைய மார்க்சியம் ஆழமானதாகவும் தூய்மையானதாகவும் மாறிவிட்டது. சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களுக்கு ஒரே வழி, ஆயுதப் போராட்டம்தான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த நம்பிக்கையின்படி நடக்கிறேன்.

சிலர், என்னை ஒரு சாகசக்காரன் என்று அழைக்கலாம். நான், சாகசக்காரன்தான். ஆனால் ஒரு வித்தியாசம். தன்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கைகளை நிரூபிப்பதற்காகத் தன்னையே அர்ப்பணம் செய்து கொள்ளத் தயங்காத சாகசக்காரன்.

இதுவே என்னுடைய கடைசிக் கடிதமாகவும் இருக்கலாம். நடக்க இருப்பதை தர்க்க ரீதியாக ஆராய்ந்து பார்த்தால், அப்படித்தான் தோன்றுகிறது. ஒரு வேளை அப்படி நடந்துவிடும் எனில், இப்போதே என்னுடைய தழுவலை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நான் உங்கள் அனைவரையும் ஆழமாக நேசிக்கிறேன். என்னுடைய நேசத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான் தெரியவில்லை.

என்னுடைய வழியில் நடப்பது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். ஆனால், பல சமயங்களில் நீங்கள் என்னைச் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு வேளை, என்னைப் புரிந்து கொள்வது கடினமான காரியமாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போதைக்கு என் மீது நம்பிக்கை வையுங்கள். அது போதும் எனக்கு.

எனது கால்கள் தொய்ந்துவிட்டன. நுரையீரல்கள் ஓய்ந்து விட்டன. ஆனால் என் மனஉறுதி, எல்லாவற்றையும் சரிசெய்யும்.

இருபதாம் நூற்றாண்டின் இந்தச் சிறிய போராளியை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள்.

அன்பு தாய், தந்தையே! உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்காத இந்தத் தறுதலைப் பிள்ளை உங்கள் இருவரையும் தழுவிக் கொள்கிறான். ஏற்றுக் கொள்ளுங்கள்.

- எர்னஸ்டோ

அன்புள்ள ஹில்டா,

இந்த கடிதத்தை நீ நீண்ட காலத்துக்குப் பிறகுதான் படிப்பாய். உன்னைப் பற்றித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ இப்போது வளர்ந்து விட்டிருப்பாய். ஒரு குழந்தைக்கு எழுதுவதைப் போல் செல்லம் கொஞ்சி எழுத முடியாது.

நான், உன்னை விட்டு வெகு தொலைவில், நமது எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான், உன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொள்வதைப் போல், நீயும் என்னை நினைத்து பெருமை படுவாய் என்பது என் நம்பிக்கை.

நீண்ட காலத்துக்குப் போராட வேண்டியிருக்கிறது. ஆகையால், நீயும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். உன்னைத் தயார் செய்து கொள். புரட்சிகர எண்ணங்களை வளர்த்துக் கொள். நிறைய படி. அம்மா சொல் பேச்சைக் கேள்.

எல்லா விதத்திலும் சிறந்தவள் என்று பெயர் எடுக்க வேண்டும். நல்ல நடத்தை, அர்ப்பணிப்பு, தோழமை உணர்வு போன்றவற்றை வளர்த்துக் கொள். உன்னுடைய வயதில் நான் அப்படி இல்லை. நீ வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். அதற்கு பொருத்தமானவளாக நீ இருக்க வேண்டும்.

பெரிய மனுஷியே! உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னைப் பிரிந்திருக்கும் காலத்துக்கும் சேர்த்து வைத்து ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

அப்பா
சே மனைவிக்கு எழுதிய கடிதம்

பி
ரியமானவளே
!

உன்னைப் பிரிந்து போவது கஷ்டமாக இருக்கிறது. என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்துக்காகத் தியாகங்கள் செய்ய விரும்புகிற இந்த மனிதனை நீ நன்கு அறிவாய்.

தைரியத்தை இழந்து விடாதே. ஒருவேளை, நான் இறந்து போனால், என் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டுச் செல்லும் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களைக் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும், எப்போதும் நான் உங்களுடன்தான் இருப்பேன். என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டுப் பிரிகிறோம் என்று எண்ணும்போது, என் வேதனை அதிகரிக்கிறது. ஆனால், மக்களைச் சுரண்டும் எதிரிகளோடு போரிடுவதற்குதான் நான் சென்று கொண்டிருக்கின்றேன் என்று நினைக்கும்போது என் வேதனை குறைகிறது.

உன் உடல்நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள். குழந்தைகளைக் கவனித்துக் கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாகப் பெற்றதையும் எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

இந்தப் போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதித் தருணத்தில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.
- சே

No comments:

Post a Comment