Monday, June 8, 2009

இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி நடவடிக்கை எடுப்போம்! இலங்கை உறுதி


இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று அமெரிக்காவிடம் இலங்கை உறுதி அளித்துள்ளது.

இலங்கையில் போர் முடிந்து விட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்துள்ளது. தற்போது, போர் பகுதிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வதாகவும் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த நாட்டு அரசு கூறி வருகிறது. எனவே, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்துகின்றன.

இந்த சூழ்நிலையில், இலங்கை வெளியுறவு மந்திரி ரோகிதா பொகலகாமா, சிங்கப்பூருக்கு சமீபத்தில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது, அமெரிக்க வெளியுறவு துணை மந்திரி ஜேம்ஸ் ஸ்டீன்பெர்க்கை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு குறித்து ரோகிதா பொகலகாமா சார்பாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

13-வது சட்ட திருத்தம்

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரத்தை பரவலாக்கும் விதத்தில் கடந்த 1987-ம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தம் அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்க வெளியுறவு துணை மந்திரி ஜேம்ஸ் ஸ்டீன்பெர்க்கிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளுக்கு கிடைத்து வந்த பண உதவியை தடுத்து நிறுத்த அமெரிக்கா அளித்த ஆதரவுக்கு மந்திரி ரோகிதா நன்றி தெரிவித்தார். போருக்கு பிறகு, பிற நாடுகளின் உதவியோடு மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இலங்கை ஆர்வமாக இருப்பதாகவும், தீவிரவாதத்தை ஒழித்த பிறகு இலங்கையில் தமிழ் அரசியல் தலைவர்கள் முழு சுதந்திரத்துடன் இருப்பதாகவும் ரோகிதா தெரிவித்தார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம்


கடந்த 1987-ம் ஆண்டு இந்தியாவில் ராஜீவ் காந்தி பிரதமராகவும், இலங்கையில் ஜெயவர்த்தனே பிரதமராகவும் இருந்தபோது, இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் `இந்திய - இலங்கை ஒப்பந்தம்' போடப்பட்டது.

அதன்படி தமிழர்களுக்கு அதிகாரத்தை பரவலாக்க இலங்கை ஒப்புக் கொண்டது. அதற்காக, அந்த நாட்டு அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த 13-வது சட்ட திருத்தத்தை தான் தற்போது அமல் படுத்தப் போவதாக இலங்கை அரசு கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment