Saturday, June 20, 2009

காம்ரேட் எம்.கே!


சில தலைவர்களின் வாழ்வும், நினைவும் மறக்கப்படுகின்றன அல்லது மறக்கடிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு தலைவர்தான் காம்ரேட் எம்கே! தோழர் கல்யாணசுந்தரம். இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் முதன்மை வரிசையில் போற்றத்தக்கவர்.

ஒரு காலத்தில் "கல்யாணசுந்தரம் கட்சி' என்றுதான் தமிழ்நாட்டுப் பாமரர்களால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புரிந்துகொள்ளப்பட்டது. அவரது நினைவும் இன்று ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. ஆம், ஜூன் 20 அவரது பிறந்தநாள். அந்த ஞாபகார்த்ததில்தான் இந்தக் கட்டுரை.

வாழ்வே போராட்டக்களம் என்று சொல்வார்களே அது எம்கேவுக்குப் பொருந்தும். தூங்கும்நேரம் தவிர அவருக்கு எப்போதும் அரசியல்தான். கட்சியோடு நில்லாமல் தொழிற்சங்கத் தலைவராகவும் அவர் பரிணமித்ததால் எப்போதும் மக்கள், தேசம் என்கிற சிந்தனைதான். தமிழகத்தின் பல அரசியல் மாற்றங்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் அவர் காரணமாக இருந்திருக்கிறார்.

எம்ஜிஆரின் அரசியல் பிரவேசத்தில் எம்கேவுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த உறவை எம்ஜிஆர் கடைசிவரைப் பேணிவந்தார் - அரசியல் வேறுபாடுகளையும் கடந்து.

பெரும் வன்முறைச் சூழலில், வட இந்தியாவில் ரயில்கள் ஓட்டமுடியாத அசாதாரண நிலைமையில், பண்டித நேருவின் அழைப்பை ஏற்று ரயில்களை ஓட்டிக்காட்டிய தீரம் அவருக்கே உரியது. பிரிட்டிஷ் ஆட்சியில் அரசாங்கத்தால் அவர் தேடப்படும் நபராக இருந்தார். அவரது படம் சினிமாத் தியேட்டர்களில் காட்டப்பட்டு அவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

ரயில்வேத் துறையின் மாபெம்ரு தலைவராக அவர் விஸ்வரூபம் எடுத்து நின்ற காலத்தில், ரயில்வேத் தொழிலாளர்கள் பெற்ற நன்மைகள் இன்றளவும் அவர் பெருமையைப் பறைசாற்றுகின்றன. துறைமுகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவராக அவர் இருந்தார். அந்தத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் அவர் தள்ளாத வயதைப் பொருட்படுத்தாமல் ஈடுபாட்டிருந்த நேரத்தில்தான் மரணம் அவரை கொள்ளைகொண்டது.

இந்திய சோவியத் நட்புறவில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு வார்த்தைகளைக் கடந்தது. சோவியத் தேசம் இந்தியாமீது காட்டிய அதீத அன்புக்கு அவர் எல்லையற்ற நன்றி உணர்வைக் கொண்டிருந்தார். நட்புறவு இயக்கத்தில் எம்கேவின் பங்களிப்பு அளவிடமுடியாதது.

பி ஆர் எல் எப் தோழர்களுக்கு அரசியல் வகுப்பு...

இலங்கைப் பிரச்சனையில் அவரது பார்வை தொலைநோக்கானது. தமிழ் விடுதலை இயக்கத்தில் பாசிசம் தலைதூகிவிடக்கூடது என்பதில் அவர் ஆழ்ந்த கவனத்தில் இருந்தார். போராளிகளுள் இடதுசாரி சிந்தனையைத் தலையாயக் கொள்கையைக் கொண்டிருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் பத்மநாபாவுடனும், அதன் தோழர்களுடனும் தோழமை பூண்டு அந்த இயக்கத்தை வழி நடத்துவதிலும் பெரும் பங்காற்றினார்.

தேசத்தின் மிகப் பெரும் தலைவர்களுடன் நட்பு பூண்டு, அதன்மூலம் ஏழைஎளியோரின்
கண்ணீர் துடைக்க முனைந்தவர் எம்கே. அவர் மனிதர்களிடம் பகைமை பாராட்டாத உயரிய பண்பாளர். அரசியல் வேறுபாடுகள் அவரை தனிமனிதரை வெறுக்கத் தூண்டியதில்லை. இந்திய இடதுசாரி இயக்கத்தில் அவர் ஒரு பெரும் புரட்சியைத் தோற்றுவித்த இரும்பு மனிதர். தேசிய ஜனநாயக சக்திகளை ஒதுக்கிவைத்துவிட்டு அரசியல் நடத்துவதில் அவர் விருப்பம் இல்லாதவராக இருந்தார்.

இசையிலும் கலையிலும் நாட்டம் கொண்ட ஓர் மென்மையான மனிதராக் அவர் இருந்தபோதிலும் அவரது உள்ளம் உருக்குலையாத உறுதி வாய்ந்தது. தனது ஒரே மகளின் மரணச் செய்தி வந்தபோதுகூட, மனதைக் கல்லாக்கிக்கொண்டு, துயரை வெளிக்காட்டாமல், கட்சிக் கூட்டத்தில் உரையாற்றி முடித்த பிறகுதான் இல்லம் திரும்பினார்.

இடதுசாரி இயக்கம் பெரும்பாலும் தனிநபர் வழிபாட்டில் ஈடுபடுவதில்லை. அதில் இழப்புகளும் உண்டு. அப்படி நேர்ந்த ஓர் இழப்புதான் எம்கேவின் பெருமைகளை தமிழகம் போதுமான அளவு உணராதது.

ஆனால் வரலாறு காத்திருக்கிறது, உரிய நேரத்தில் எம்கேவை உயர்த்திப் பிடிக்க!

செந்தோழன்

No comments:

Post a Comment