Sunday, June 21, 2009

பண்பாடு-கலாச்சாரம் ...


கே.சித்ரா

நேஷனல் ஜியாகிரபி சேனலில் NO BORDER என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். அமெரிக்க- தாலிபான் படைகளுக்கிடையே ஏற்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிய குடிமக்களின் வாழ்க்கையைப் பற்றிய ஆவணப்படம் அது.

சண்டைக்கு பயந்து, தாங்கள் சமீப காலமாய்வசித்துவந்த குடியிருப்பைத் துறந்து, பாமீர் மலைகளில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த குகைகளில் தங்கியிருக்கும் பாவப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வை மீர் என்ற எட்டு வயது சிறுவனின் பார்வையிலிருந்து கூறியிருந்தார்கள்.

உலகின் மிகப் பழைமை வாய்ந்த, தாலிபன்களால் தகர்த்தெறியப்பட்ட பாமீர் மலைப் பகுதியின் புத்தர் சிலைகளையும், அதை ஒட்டி அமைந்திருக்கும் சரித்திரப் புகழ் வாய்ந்த குகைகளையும், உயிருக்கு பயந்து அதில் தங்கியிருக்கும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் படும் சிரமங்களையும், துயரங்களையும் மிக அற்புதமாக, இயற்கையாகப் படம் பிடித்திருந்தனர்.

போரில் தனது 15 வயது மகளைத்தவிர அனைத்தையும் பறிகொடுத்த ஒரு கிழவர் [60 வயது இருக்கலாம்] . வாழ் சூழல் அவரை மிகவும் முதுமைப்படுத்தியிருந்தது.

அதேபோல, தன் தாயைத் தவிர அனைத்தையும் இழந்திருந்த ஒரு இளைஞன் [23 வயது இருக்கலாம்]. தாய்க்கு 50 / 55 இருக்கலாம். இவரும் தன் பெரும்பாலான பற்களையெல்லாம் இழந்து பொக்கையுடன் மிகவும் தளர்ந்து காணப்பட்டார். அவரது முக்காடிட்ட முகத்திலிருந்து குழிவிழுந்த கண்களையும் பொக்கை வாயையும்தான் அதிகம் காண முடிந்தது.

ஒரு காட்சியில் அந்தப் பெரியவர் இளைஞனிடம் சொல்கிறார்: "இழப்பதற்கு இனி என்னிடம் எதுவும் இல்லை. உன் நிலையும் அதுதான். ஆயின், உனக்குக் கொடுப்பதற்கென்று எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். எனக்குக் கொடுப்பதற்கு உன்னிடம் ஒரு தாய் இருக்கிறாள். என்ன சொல்கிறாய்?"

இளைஞன் சம்மதிக்கிறான். அவருடைய பதினைந்து வயது மகளை மணந்து கொள்கிறான். அவன் தாயை இந்தப் பெரியவர் மணந்து கொள்கிறார்.

மணம் என்றால், மேளதாளம், தாலி, விருந்து இவற்றுடன் அல்ல, அப்படி அப்படியே ஜோடி சேர்ந்து ஒரே குகையில் வசிக்கத் தொடங்குகின்றனர். இந்த இளம் ஜோடிக்கு ஒரு பெண்குழந்தை [8 மாத அளவில் ]. வயதான ஜோடிக்குப் பிறந்தவன்தான் இந்த ஆவணப்படத்தின் நாயகன் மீர் [8 வயது ].

இது ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம், கலாச்சார சீரழிவு, பண்பாட்டுப் பேரழிவு, அது இது , இவையல்ல நான் சொல்ல வருவது.

முடிந்த முடிவான பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. மாற்றம் ஒன்றுதான் நிலையானது. இவர்களின் உறவுநியாயமா நியாயமற்றதா என்பதல்ல கேள்வி.

ஒருவரின் வாழ்சூழல் , தேவை, சந்தர்ப்பம், இவையெல்லாம்தான் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தீர்மானிக்கிறது. நமக்கு புனிதமானதாகவும் இருக்கும் எந்தவொன்றும் மற்றவர்க்கும் அவ்வாறேஇருக்கவேண்டிய அவசியமில்லை. அதைத் தீர்மானிக்க வேண்டியது அவரவருடைய வாழ்சூழல் மட்டும்தான்.

No comments:

Post a Comment