Monday, July 20, 2009

இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்...




கிப்த்துக்கு வருகை புரிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, அங்குள்ள பல்கலைக்கழக மண்டபத்தில் உரையாற்றியது உலகின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அவரது ஆங்கில உரை ஒரே நேரத்தில் பதினான்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் மட்டுமன்றி, கியூபாவின் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ, வெனிசுலா தலைவர் சாவேஸ் உள்பட, உலகின் பல முனைகளில் இருந்தும் கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

உலகெங்குமுள்ள முஸ்லிம்களுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவோம், பரஸ்பர மரியாதை, பரஸ்பர நலன்கள் அடிப்படையில் அது அமையவேண்டும்; அமெரிக்காவும் இஸ்லாமும் முரண்பட்டவை அல்ல; அவற்றிக்குமிடையில் மோதல் தேவையில்லை என்று ஒபாமா பிரகடனப்படுத்தினார். 'சலாம் அலைக்கும்' என்று அவர் வணக்கம் கூறியதும், மண்டபமே அதிரும்வண்ணம் கரவொலிகள் எழுந்தன.

பாலஸ்தீனப் பிரச்சனை குறித்துப் பேசிய ஒபாமா, காசா பகுதியில் ஆட்சி புரியும் ஹமாஸ் இயக்கத்தினர், வன்முறையைக் கைவிடவேண்டும்; இஸ்ரேல் மேற்குக் கரையில் யூதக் குடியிருப்புக்களை நீக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். அமெரிக்க நீக்ரோ மக்கள் தங்கள் உரிமைகளுக்காக அமைதி வழியிலேயே போராடினர். அதுபோல பாலஸ்தீனியர்களும் அமைதி வழியில் போராடவேண்டும்; இஸ்ரேல் என்ற நாட்டை முஸ்லிம் உலகம் அங்கீகரிக்கவேண்டும்; அதுபோல, இஸ்ரேலும் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கவேண்டும் என்றார்.

ஹமாஸ் வன்முறையைக் கைவிடவேண்டும் என்று பேசிய ஒபாமா,இஸ்ரேலின் வன்முறையை, ஆக்கிரமிப்பை ஏன் கண்டிக்கவில்லை என முஸ்லிம் உலகம் ஆதங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இருநூற்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களுடன் திகழ்வதை அமெரிக்க ஊக்குவித்து வருகிறது என்பதை எடுத்துக் காட்டி பல ஏடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இரண்டாம் உலகப்போரில் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டு பெரும் சிதைவுக்கு உள்ளாயினர். இதைக் குறிப்பிட்ட ஒபாமா, அதேபோல் தங்கள் தாயகத்துக்கான போராட்டத்தில் பாலஸ்தீநியர்களான முஸ்லிம்களும், கிருத்தவர்களும் பெரும் சேதங்களை அனுபவித்துள்ளனர் என்று ஒப்பிட்டுக் கூறினார். இதை முஸ்லிம் பத்திரிகைகள் வரவேற்றுள்ளன. ஆனால் இஸ்ரேலின் வலதுசாரிகள் ஒபாமாவின் பேச்சை வன்மையாகக் கண்டித்துள்ளனர். ஹிட்லரால் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டதும், பாலஸ்தீனப் பிரச்சனையும் ஒன்றா என அவர்கள் ஆத்திரப்படுகின்றனர். ஒபாமா கூறியபடி பாலஸ்தீன மேற்குக் கரையிலிருந்து யூதக் குடியிருப்புக்களை இஸ்ரேல் வெளியேற்றுமா என்று முஸ்லிம் உலகம் கேள்விஒக்கனைகளை முன்வைத்துள்ளது.

இராக்கைப் பற்றி தனது பேச்சில் குறிப்பிட்ட ஒபாமா, படிப்படியாக அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும்; 2012 இல் முற்றிலுமாக வெளியேறிவிடும் என்றார். இராக்கின் எண்ணெய் வளத்தை அமேரிக்கா கைப்பற்றப் போவதில்லை என்றும், அங்கு எந்த ராணுவ தளத்தையும் நிறுவப் போவதுமில்லை என்றும் உறுதி அளித்துள்ளார்.

இரானைப் பற்றிப் பேசிய ஒபாமா, 1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியை கவிழ்ப்பதில், அமெரிக்கா பங்கு வகித்தது குறித்து, தான் வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை வரவேற்றுள்ள பல பத்திரிகைகள், இப்போதும் பல ஜனநாயக விரோத ஆட்சிகளை இன்னமும் அமெரிக்கா ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. எகிப்தில் முப்பது ஆண்டுகளாக அவசர நிலைப் பிரகடனம் அமலில் உள்ளதை அமெரிக்கா ஆதரிக்கத்தானே செய்கிறது என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட்டதும் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறிவிடும் என்றும், ராணுவதளம் அமைக்கும் நோக்கம் இல்லை என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். ஆனால், தாலிபான்களை ஒழிப்பது என்ற பெயரால் நடத்தப்படும் தாக்குதலில் கொல்லப்படும் அப்பாவிகளில் எழுபது சதவீதம்பேர் பெண்களும் குழந்தைகளும்தான் என்று பத்திரிகைகள் குற்றம் சாடியுள்ளன.

ஒபாமாவின் பேச்சு முஸ்லிம் உலகத்தை பிளவுபடுத்துவதாகும் என்று பின்லேடன் குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரேலிய வலதுசாரிகளும், முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளும் ஒபாமாவின் பேச்சை கடுமையாகத் தாக்கியுள்ளன. ஆயினும் ஒபாமாவின் உரையை ஒரு புதிய துவக்கம் என உலக ஏடுகள் பாராட்டியுள்ளன.

- எல்.ஜி.கீதானந்தன்

No comments:

Post a Comment